Wednesday, 10 June 2015

குலசேகரர் விரும்பும் மணவாளன்

குலசேகரர் விரும்பும் மணவாளன்

    குலசேகராழ்வார் இவ்வுலகமும், உலக மக்களும், மக்களின் செயல்பாடுகளும் நிலையில்லாதவை என்று எண்ணுகிறார். நிலையான ஒன்று என்பது அரங்கனது அருளே என்று முடிவு செய்து பாடுவதை இக்கட்டுரையில் காணலாம்.
உலகத்தாரோடு சேருவதில்லை
    நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையை நிலை என்று கருதி, இவ்வுலக மக்களோடு நான் சேர்வதில்லை. அரங்கா என்றழைத்து அவருக்கு மட்டுமே அன்புடையவனாக இருக்கிறேன் என்பர் குலசேகராழ்வார்.
            மெய்இல் வாழ்க்கையை மெய் எனக்கொள்ளும்
வையம் தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஐயனே! அரங்கா என்று அழைக்கின்றேன்.  (நாலா. 668)

பெண் இன்பம் போற்றுவாரை சேருவதில்லை
    நூல் போன்ற மெல்லிடைப் பெண் இன்பமே பேரின்பம் என்னும் உலகத்தாரோடு நான் சேருவது இல்லை. அரங்கா என்று பாடி வருகின்றேன். 
            நூலின்நேர் இடையார் திறத்தே நிற்கும்
            ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான்
            ஆலியா அழையா அரங்கா என்று      (நாலா. 669)

மன்மத வில்லுக்கு அடிமைப்பட்டாரோடு சேருவதில்லை
    ஐங்கணை மன்மதன் வில்லுக்கு அடிமைப்பட்டு உலக மக்களோடு நான் கூடுவது இல்லை. முத்து மாலையன், முழுமுதல்வன், காவலன், அன்புக்கு அரணான அரங்கனை மட்டுமே அன்பு கொண்டு வணங்குவேன் என்பர் குலசேகரர்.
            மாரனார் வரிவெஞ் சிலைக்கு ஆட்செய்யும்
            பாரினாரொடும் கூடுவது இல்லையான்
            ஆர மார்வன் அரங்கன் அனந்தன்நல்
            நூரணன் நாகாந்தகன் பித்தனே.    (நாலா. 670)

உண்டி, உடைக்கு உகந்து ஒடுவாரொடு சேர்வதில்லை
    பெருமாளே, அரங்கா, பூதனையை மாய்த்தவனே, அன்புக்கு எளியவனே உன் அருளால் உன் நினைவாகப் பைத்தியம் பிடித்தவன் போல் உள்ளேன். ஆனால், உணவுக்கும், உடைக்கும் விரும்பி வாழும் மக்களோடு நான் சேர்வதில்லை என்பர் குலசேகரர்.
            உண்டியே உடையே  உகந்து ஓடும்இம்
            மண்டலத்தொடுமு; கூடுவது இல்லையான்       
            அண்டவாணன் அரங்கன் வன் - பேய் முலை
            உண்ட வாயன்தன் உன்மத்தன் காண்மினே  (நாலா. 671)

அல்லது செய் நீதியாரோடு சேர்வதில்லை
    குற்றமற்ற நல்வழி போகாமல் பொல்லாங்கு விரும்புகிறவர்களோடு நான் சேர்வதில்லை. அரங்கனே, ஆதிஆயனே உன்பித்தனாக மட்டுமே இருக்கிறேன் என்பர் குலசேகரர்.
                தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய்
நீதியாரொடும் கூடுவது இல்லை யான்
ஆதிஆயன் அரங்கன் அந்தாமரைப்
பேதை மா மணவாளன்தன் பித்தனே    (நாலா. 672)

என் போன்ற அடிமையுடன் சேரேன்
    உலகத்தில் வாழும் மக்களைப் போல நானும் மக்களில் அடிமையுடன் வாழ்ந்தேன். இனி அடிமை வாழ்வான மக்களுடன் சேரேன். அரங்கனுக்கு எழுபிறப்பிலும் பித்தனாகவே வாழ்வேன்.
            எம்பரத்தர் அல்லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாகக் கருதலன்
தம்பிரான் அமரர்க்கு அரங்கநகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே   (நாலா. 673)

எவ்வித மனிதர்களோடும் சேர்ந்தழிவதை தவிர்த்தனன்
    எதை அடைவதற்கும், எவ்விதமான மனிதர்களோடும் சேர்ந்தழிவதைச் செங்கண்மால் என் முன்நின்று நீக்கினான். அப்பா – அரங்கா என்று அழைக்கின்றேன். அவனுடைய பித்தனாகிவிட்டேன் என்பர் குலசேகரர். 
            எத்திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன்.  (நாலா. 674)

யானும் ஓர் பேயனே
    உலகத்தில் உள்ள அனைவரும் பேயர்களே. நானும் ஒரு பேயன். ஆயனே! அரங்கா என்று அழைக்கின்றேன். பெருமாளுக்குப் பேயனாகவே பணிசெய்வேன் சென்பர் குலசேகராழ்வார்
             பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்
ஆயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்!
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே  (நாலா. 675)

முடிவுரை
    உலகத்தாரோடு சேருவதில்லை என்றும், பெண் இன்பம், மன்மத வில்லுக்கு அடிமையாகும் மக்கள், உண்டி உடைக்கு வாழும்மக்கள், தீயதை செய்வார், தீயவர் நட்பை தவிர்த்தவன் என்று கூறி அனைத்து சிந்தனையும் அரங்கனே எனும் நோக்கில் வாழும் குலசேகரர் கருத்தை மேற்கண்ட கட்டுரை மூலம் உணரலாம்.
            

No comments:

Post a Comment